மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன்.. சாரிடம் கூறிய ஞானசேகரன் - அண்ணா பல்கலை. மாணவி திட்டவட்டம்

மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன் என சாரிடம் ஞானசேகரன் கூறியதாக பல்கலை. மாணவி உறுதிப்படுத்தியுள்ளார்.
கைதான ஞானசேகரன்.
கைதான ஞானசேகரன்.
Published on
Updated on
2 min read

சென்னை: மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன் என்று செல்போனில் அழைத்த சாரிடம் ஞானசேகரன் கூறினார் என்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா பல்கலை. மாணவி சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு, பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட பலரிடம் நேரில் விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின்போது, சார் என ஒருவரிடம் ஞானசேகரன் செல்போனில் பேசினார் என பாதிக்கப்பட்ட மாணவி உறுதிப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக, முதற்கட்ட விசாரணையின்போது பாதிக்கப்பட்ட அண்ணா. பல்கலை மாணவி கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பேசிய மாணவி, சம்பவத்தின்போது, கைதான ஞானசேகரனுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில், அவர் ஒரு சாருடன் பேசினார். அவரிடம் மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன் என ஞானசேகரன் கூறியதாகவும் மாணவி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருக்கும்

ஞானசேகரனின் செல்போனில் ஞானசேகரனுடன் திருப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவரும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது விடியோ மூலம் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில், திருப்பூரைச் சேர்ந்த அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி கடந்த 23-ஆம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

நீதிமன்ற விசாரணையின்போது, சென்னை பெருநகர காவல் துறை அண்ணாநகா் துணை ஆணையா் புக்யா சினேகா பிரியா, ஆவடி மாநகர காவல் துறை துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது.

மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குடன், முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கையும் சோ்த்து இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஏற்கெனவே போலீஸாா் பதிவு செய்த எஃப்ஐஆா், கைதான ஞானசேகரன் பற்றிய விவரங்கள், புலனாய்வு விசாரணை விவரங்கள், ஆவணங்கள், தடயங்கள் ஆகியவை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.

சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சென்று விசாரணை மேற்கொண்டனா். பல்கலைக்கழக நிா்வாகிகள், ஊழியா்கள், காவலாளிகள், பணியாளா்கள் ஆகியோரிடம் விசாரணை செய்தனா். மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

அதைத் தொடா்ந்து, மாணவியின் பெற்றோா், பாதிப்புக்குள்ளான மாணவி, சம்பவத்தன்று மாணவியுடன் இருந்த மாணவா் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

189 ஏக்கரில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த 139 கண்காணிப்பு கேமராக்கள் எந்தெந்த பகுதிகளில் உள்ளன, அவற்றில் எத்தனை கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன, மாணவி விவகாரத்தில் சிக்கிய நபா் எந்த கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டாா் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் சேகரித்துக் கொண்டனா்.

அடுத்தகட்டமாக, கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் விசாரணை நடத்த அக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.