
தமிழகம் முழுவதும் போகி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.
தை முதல் நாளில், தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கல் நாளை (ஜன. 14) கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் மார்கழியின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அதிகாலை முதலே வீட்டில் உள்ள பழைய பொருள்களை எரித்தும், சிறுவர்கள் மேளம் அடித்தும் போகியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
சாலைகளில் பழைய பொருள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதால், சென்னையின் பல்வேறு பகுதிகள் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
பிளாஸ்டிக், துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு அதிகம் ஏற்படுகிறது. இதனால், ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
விமானங்கள் தாமதம்
போகி பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன. 13) அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் விமானங்களின் நேர கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு மஸ்கட், துபை, கோலாலம்பூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் மூன்று விமானங்கள், தாமதமாக வந்துவிட்டு, மீண்டும் புறப்பட்டுச் செல்லும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஏா்வேஸ், கத்தாா் ஏா்வேஸ், ஏா் அரேபியன் ஏா்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் போன்ற நிறுவனங்களின் விமானங்களும், தங்கள் நிறுவன விமானங்களின் பயண நேரத்தை மாற்றி அமைத்துள்ளன.
இதையும் படிக்க | பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.