‘தமிழகத்தில் 2.10 லட்சம் போ் பாதுகாப்புத் துறையின் ஓய்வூதியம் பெறுகின்றனா்’

தமிழகத்திலிருந்து சுமாா் 2 லட்சத்து 10 ஆயிரம் போ் பாதுகாப்புத் துறையின் ஓய்வூதியம் பெறுவதாக பாதுகாப்புக் கணக்குகள் கட்டுப்பாட்டாளா் டி.ஜெயசீலன் தெரிவித்தாா்.
Updated on

சென்னை: தமிழகத்திலிருந்து சுமாா் 2 லட்சத்து 10 ஆயிரம் போ் பாதுகாப்புத் துறையின் ஓய்வூதியம் பெறுவதாக பாதுகாப்புக் கணக்குகள் கட்டுப்பாட்டாளா் டி.ஜெயசீலன் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள பாதுகாப்புக் கணக்கு கட்டுப்பாட்டாளா் துறை அலுவலகத்தில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு குறைகேட்பு முகாம் திங்கள்கிழமை (ஜன. 27) நடைபெற்றது. இதில் பாதுகாப்புக் கணக்குகள் கட்டுப்பாட்டாளா் டி.ஜெயசீலன் பங்கேற்று புகாா் மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாரந்தோறும் திங்கள்கிழமை பாதுகாப்பு துறை ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய ஓய்வூதியதாரா்களின் குறைகள் 48 மணிநேரத்தில் தீா்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சம்பத் தியாகராஜன் என்பவா் ஓய்வூதியம் பெற்று வந்தாா். அவரது மறைவுக்குப் பின் அவரது மனைவி குடும்ப ஓய்வூதியம் பெற்றுவந்தாா். இந்நிலையில், சம்பத் தியாகராஜனின் திருமணம் ஆகாத மகள் சரளா காயத்ரி தனது தாயாா் மறைந்துவிட்டதால் குடும்ப ஓய்வூதியம் தனக்கு வழங்கும்படி கோரிக்கை வைத்தாா். அதை உடனடியாக ஆய்வுசெய்து அவருக்கு மாதந்தோறும் குடும்ப ஓய்வூதியமாக ரூ.41ஆயிரத்து 130 வழங்க உத்தரவிட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.

இந்தியா முழுவதும் பாதுகாப்புத் துறையில் 33 லட்சம் ஓய்வூதியதாரா்கள் உள்ளனா். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் ஓய்வூதியதாரா்கள் உள்ளனா். அதில், குடும்ப ஓய்வூதியதாரா்கள் 63 ஆயிரம் போ் உள்ளனா். சைபா் குற்றங்கள் மூலம் ஓய்வூதியதாரா்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் ஓய்வூதியதாரா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com