உயிருக்கு அச்சுறுத்தல்: அஜித்குமார் வழக்கின் முக்கிய சாட்சி புகார்!

அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சி, பாதுகாப்பு கோரி மனு...
ajithkumar murder case
சக்தீஸ்வரன் எடுத்த விடியோ
Published on
Updated on
1 min read

திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமாரை போலீசார் தாக்கும் விடியோவை எடுத்த சக்தீஸ்வரன் என்பவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபியிடம் கடிதம் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், காவல் துறையினர் தாக்கியதில் பலியாகினார்.

இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் விடியோவை கோயில் ஊழியர் சக்தீஸ்வரன் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வழக்கில், முக்கிய சாட்சியாக அந்த விடியோ அமைந்துள்ளது.

நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான சக்தீஸ்வரன் காவலர்கள் அஜித்குமார் தாக்கியது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கின் பிரதான சாட்சியாக சக்தீஸ்வரன் உள்ளார்.

இந்த நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு கோரியும் டிஜிபிக்கு சக்தீஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “அஜித்குமார் கொலை வழக்கில் நான் சாட்சி கூறியிருக்கும் நிலையில், எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதாகியுள்ள தனிப்படை காவலர் ராஜா என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பிலும் அவர்களைப் பயன்படுத்துபவராகவும் இருக்கிறார். கடந்த சனிக்கிழமையே (ஜூன் 28) எனக்கு மிரட்டல் விடுத்தார்.

அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கும் விடியோவை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதால், எனது உயிருக்கும் என்னை சார்ந்தவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கின்றது. நீதிமன்ற உத்தரவின்படி, தனக்கு பாதுகாப்பு அவசியமாக கருதுகிறேன். திருப்புவனம் அல்லாத பிற மாவட்ட ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தனக்கு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள வழக்கின் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சக்தீஸ்வரன் டிஜிபிக்கு எழுதிய கடிதம்
சக்தீஸ்வரன் டிஜிபிக்கு எழுதிய கடிதம்
Summary

Saktheeswaran, who filmed the police assaulting security guard Ajith Kumar in Thiruppuvanam, has written a letter to the Tamil Nadu DGP seeking protection as his life is under threat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com