
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையின் உபரிநீர் போக்கி மதகுகள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று(ஜூலை 13) மூடப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரிநீரானது காவிரியில் திறக்கப்பட்டது.
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீரால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கடந்த மாதம் 29ம் தேதி மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணை நிரம்பியதால் ஜூன் 29ந் தேதி மாலை முதல் மேட்டூர் அணையில் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கியான 16 கண் பாலத்தின் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது.
இன்று(ஜூலை 13) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22,500 கன அடியாக குறைந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாகவும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகு வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று காலை 9 மணிக்கு மேட்டூர் அணையில் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கியான பதினாறு கண் பாலத்தின் மதகுகள் மூடப்பட்டன.
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது அணை நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.