கோவையில் பலியான குழந்தை - தாய்
கோவையில் பலியான குழந்தை - தாய்

கோவையில் ஒரு அபிராமி! நாலரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்காக நாலரை வயது குழந்தையைக் கொன்ற தாய் கைது
Published on

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நாலரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம் ஆகி தனது ஆண் குழந்தையுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

அவரும், குழந்தைக்கு பல விதவிதமான ஆடைகள் போட்டு ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில், கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனியே வாழ்ந்து வரும் தமிழரசி கட்டட வேலைக்கு சித்தாளாக சென்று வந்த நிலையில் அவருடன் கட்டட வேலை செய்து வரும் வசந்த் என்பவர் உடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மதியம் அவரது நான்கரை வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு இருந்த தமிழரசியை பிடித்து வந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தை அழுது கொண்டிருந்ததாகவும் அப்போது தான் அடித்ததால் குழந்தை இறந்து விட்டதாகவும் தமிழரசி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் தமிழரசியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அவர் வசித்து வரும் இருகூர் பகுதிக்கு நேரில் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே, சென்னை குன்றத்தூரில், திருமணத்தை மீறிய உறவுக்காக, பிள்ளைகளைக் கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது இதுபோன்ற ஒரு கொலைச் சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com