
சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஏடிஜிபி ஜெயராமை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணை மீட்பதற்காக இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண்வீட்டார் கடத்தியுள்ளனர். இதில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
கைதாவதை தவிர்க்கும் விதமாக தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே, சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமுக்கும் தொடர்பு இருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை தொடர்ந்து, பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபியை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருவரும் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்த நிலையில், இருவரும் இன்று பிற்பகல் நீதிமன்றத்துக்கு வந்தனர்.
விசாரணை மேற்கொண்ட நீதிபதி வேல்முருகன், பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கும் மனுவை ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்றத்துக்கு போலீஸ் சீருடையில் வந்திருந்த ஜெயராம், சீருடையை மாற்றிய பிறகு கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.