
செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கின்ற வகையில், செய்யூரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (11.3.2025) செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:
” கடந்த நான்காண்டுகளில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தை வளர்த்தெடுக்க ஏராளமான பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சில முத்திரைத் திட்டங்களை மட்டும் நான் தலைப்புச் செய்தியாக சொல்ல விரும்புகிறேன்.
* கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைக்கப்பட்டதோடு அங்கே 6 ஏக்கர் பரப்பளவில், நீரூற்றுகளுடன் கூடிய புதிய பூங்காவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
* செங்கல்பட்டில் தனியார் பங்களிப்புடன் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறதுது.
* மாமல்லபுரத்தில் 74 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
* வரதராஜபுரம், முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமான பணிகள் 42 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
* நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில், 4 ஆயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.
* மறைமலைநகரில் புதிய தாவரவியல் பூங்கா
* உலகப்புகழ் பெற்ற ‘லண்டன் க்யூ கார்டன்’ அதனுடன் சேர்ந்து 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கிறது.
* தாம்பரம் அரசு மருத்துவமனையை 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்துகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
* செங்கல்பட்டு மாவட்டத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில், மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
* பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதிகள், கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.
* 43 கோடி செலவில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், ஒருங்கிணைந்த பயிற்சி மையம் மற்றும் அரசு பாதுகாப்பு இல்லம் ஆத்தூர் கிராமத்தில் திறக்கப்பட்டிருக்கிறது.
* செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை உணவகம் பயன்பாட்டில் இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஒரு புதிய அறிவிப்பையும் இந்த விழா மூலமாக நான் அறிவிக்க விரும்புகிறேன். அப்படி அறிவிக்கவில்லை என்றால் அன்பரசன் என்னை விடமாட்டார். தொழில்துறையில் முன்னணியில் இருக்கக்கூடியது செங்கல்பட்டு மாவட்டம். நேற்று கூட அதற்கு உதாரணமாக, அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் அந்தப் பணிகளை முடித்து கோத்ரெஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை நான் வந்து தொடங்கி வைத்தேன்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கின்ற வகையில், செய்யூரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று இந்த விழா மூலமாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றன். நாங்கள் எதை அறிவித்தாலும் அதெல்லாம், அரசாணையாகும். வேகமாக செயல்பாட்டிற்கு வரும்! அதுமட்டுமல்ல, திட்டங்களை முடித்து, திறப்பு விழாவுக்கு நானே வருவேன்!
இதையும் படிக்க: 8 மாவட்டங்களில் இன்று கனமழை!
இப்படி, துரிதமாக செயல்படுகின்ற காரணத்தால் தான் இந்தியாவின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இன்றைக்கு உயர்ந்திருக்கிறது! பொருளாதாரக் குறியீடுகள் எல்லாவற்றிலும் தமிழ்நாடு வளர்ச்சியை எட்டி இருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் கோடிக்கும் மேலாக, தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம், நம்முடைய ஆட்சியின் மீதான நம்பிக்கை! வறுமை இல்லை! பட்டினிச் சாவு இல்லை! என்ற நிலையில் திறமையான - வளமான - உண்மையான நிர்வாகத்தை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம். சில தடைகள் மட்டும் இல்லையென்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி இன்னும் வேகமாக வளர்ந்திருக்கும்." என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.