தமிழக அமைச்சரவையில் துறைகள் மாற்றம்: துரைமுருகனுக்கு சட்டத்துறை, ரகுபதிக்கு கனிமவளத்துறை!

அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமவளத்துறை பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது.
துரைமுருகன்
துரைமுருகன்
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று மீண்டும் அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனிடமிருந்த கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதுபோல, அமைச்சர் ரகுபதி வசமிருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களாக இருந்த செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி ராஜிநாமாவைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை அண்மையில்தான் மாற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில், திடீரென ஒரு அமைச்சரவை மாற்றம் எதிர்பாராததாக உள்ளது.

அமைச்சர்களின் துறைகள் மாற்றம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக, ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளள்து.

இனி, அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சேர்த்து சட்டத்துறையையும் கவனிப்பார் என்றும், அமைச்சர் ரகுபதி இனி கனிமவளத்துறையை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே 2009 - 11ஆம் ஆண்டு துரைமுருகன் சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். அவரும் சட்டம் படித்தவர், வழக்குரைஞர். அதன் அடிப்படையில் அவருக்கு தற்போது சட்டத்துறை மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கான அடிப்படைக் காரணம் தெரியவரவில்லை.

அதுபோல, அமைச்சர் ரகுபதிக்கு முக்கியத் துறை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் கனிமவளத்துறை ஒதுக்கப்பட்டிருக்கலாம். ஆண்டுக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கும் திட்டங்களைக் கொண்டது நீர்வளத்துறை. எனவே, இரண்டு பெரிய துறைகள், துரைமுருகனிடம் இருப்பதால், கனிமவளத்துறை ரகுபதிக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறியிருக்கிறார்கள்.

திமுக ஆட்சியின்போது முக்கிய துறைகள் துரைமுருகனிடம் இருப்பது வழக்கம். இந்த நிலையில்தான் மிகப்பெரிய அரசியல் மாற்றமாகவும் இது பார்க்கப்படுகிறது. வழக்கமாக துறைகள் மாற்றப்படுவது என்பது முதல்வரின் தனிப்பட்ட முடிவு. ஆனாலும், மூத்த அமைச்சரின் துறை மாற்றப்பட்டிருப்பதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த 1971ஆம் ஆண்டு முதல் எம்எல்ஏ-வாக இருந்தவர்களில் தற்போது சட்டப்பேரவையில் இருப்பவர் துரைமுருகன்தான். கிட்டத்தட்ட இவர் 10வது முறையாக எம்எல்ஏ வாக இருக்கிறார். திமுகவில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தவர்கள் என்ற பெருமையை பெற்றவர்கள் இரண்டுபேர். அது கருணாநிதியும் துரைமுருகனும்தான். அந்த வகையில் திமுகவின் முக்கிய அமைச்சராகவும் மூத்த அமைச்சராகவும் இருப்பவர் துரைமுருகன். தற்போது இவரது துறை மாற்றப்பட்டிருப்பது, அதுவும் கனிமவளத்துறை மாற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் அனைத்து ஆட்சிக் காலத்திலும் இவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும். கடந்த 2006 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை ஒன்றாக இருந்தபோது அதனை கவனித்தவர் துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com