
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்பீடு வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பு குறித்து சிபிஐ வழக்குரைஞர் சுரேந்திர மோகன் கூறுகையில், மேல்முறையீடு சென்றாலும் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்பீடு வழங்க தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், திருநாவுக்கரசுக்கும் ஐந்தாவது குற்றவாளி மணிவண்ணனுக்கும் தலா 5 ஆயுள் தண்டனையும், மூன்றாவது குற்றவாளி சதீஷ்-க்கு 3 ஆயுள் தண்டனையும், 6வது குற்றவாளி பாபு, 8வது குற்றவாளி அருளானந்தம் மற்றும் 9-வது குற்றவாளி அருண்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், ஹரன்பால்-க்கு 3 ஆயுள் தண்டனையும் பிறப்பித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.
சாகும்வரை ஆயுள் தண்டனை என்றால், ஒரு ஆயுள் தண்டனையோ, ஐந்து ஆயுள்தண்டனையோ ஒன்றுதான் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இன்று காலை, குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்திருந்த நிலையில், பகல் 12 மணிக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை வெளியிட்டார்.
தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றவாளிகள் 9 பேரும் 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று சிபிஐ தரப்பு வழக்குரைஞர் சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.