காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜசுவாமி கோயில் தேர்த் திருவிழா

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் கொண்டை முடிச்சு அலங்காரத்தில் உற்சவர் வரதராஜசுவாமி
ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் கொண்டை முடிச்சு அலங்காரத்தில் உற்சவர் வரதராஜசுவாமி
Updated on
1 min read

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித்தாயார் சமேத வரதராஜசுவாமி கோயில். இக்கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்மாதம் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-வது நாள் நிகழ்ச்சியாக தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் வரதராஜசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி, அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் உற்சவர் வரதராஜசுவாமி ஆலயத்திலிருந்து கொண்டை முடிச்சு அலங்காரத்தில் ராஜநடையுடன் தேருக்கு எழுந்தருளினார். இதன்பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தேரோட்டத்தையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பு கருதி நகரில் பல இடங்களில் குடிநீர் தொட்டிகள், கழிப்பறை வசதிகள் ஆகியனவும் செய்யப்பட்டிருந்தன. நகரில் உயர் கோபுரங்கள் அமைத்தும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த்திருவிழாவின்போது காலையில் தேர் புறப்படுவதற்கு முன்பாக பக்தர்கள் தேரில் ஏறி சுவாமியை தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி தேர் மாலையில் நிலைக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் தேரில் ஏறிச் சென்று சுவாமியை தரிசிக்க காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.

தேர் வரும் வழிநெடுகிலும் வணிக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் பலரும் அன்னதானம், மோர், இனிப்பு வழங்கினார்கள். தேரோட்டத்தையொட்டி நகரில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தேர்த்திருவிழாவில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஆட்சியர் (பயிற்சி) ந.மிருணாளினி, அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, அறநிலையத்துறை செயலாளர்கள், அரசு அதிகாரிகள் பலரும் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com