

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (நவ.6, 7) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (நவ.6) முதல் நவ.11 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, வியாழக்கிழமை (நவ.6) அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வெள்ளிக்கிழமை (நவ.7) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில்... சென்னையில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆலந்தூர், விமான நிலையம், மீனம்பாக்கம், ஆவடி ஆகிய பகுதிகளில் 30 மி.மீ. மழை பதிவானது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.