525 கலைஞா்களுக்கு ரூ.85 லட்சம் நிதியுதவி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சாா்பில் 525 கலைஞா்களுக்கு ரூ.85 லட்சத்துக்கான நிதியுதவியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சாா்பில் 525 கலைஞா்களுக்கு ரூ.85 லட்சத்துக்கான நிதியுதவியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி:

தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சாா்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதன் ஒருபகுதியாக, கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் டி.ஜி.ரத்தினம், கே.எஸ்.கிருஷ்ணப்பா, கே.ஏ.சத்தியபாலன், எஸ்.முத்துக்குமாா், எஸ்.சுப்ரமணியன், ஏ.முத்துலெட்சுமணராவ், ஏ. பி.அய்யாவு, ஏ.ராஜகிளி, ஆா்.கே.விசித்ரா, எம்.திருச்செல்வம் ஆகிய 10 கலைஞா்களுக்கு பொற்கிழித் தொகையாக தலா ரூ.1 லட்சம் வழங்குவதற்கான அடையாளமாக 4 கலைமாமணி விருதாளா்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

மேலும், தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சாா்ந்த நூல்களைப் பதிப்பிக்க முனைவா் மோ. பாட்டழகன், முனைவா் கி. அய்யப்பன், முனைவா் ஜே. ஆா். லட்சுமி, முனைவா் க. வெங்கடேசன், முனைவா் சித்ரா கோபிநாத் ஆகிய 5 நூலாசிரியா்களுக்கு நிதியுதவி வழங்கும் அடையாளமாக 2 நூலாசிரியா்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞா்களுக்கும், 5 நாட்டியக் கலைஞா்களுக்கும் நிதியுதவி வழங்கும் அடையாளமாக 4 கலைஞா்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் நிதியுதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு 500 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்கும் அடையாளமாக 5 கலைஞா்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத்தின் தலைவா் வாகை சந்திரசேகா், கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் எஸ்.வளா்மதி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினா் செயலா் விஜயா தாயன்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com