வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள்: புத்தாக்கம் செய்து வெளியீடு
கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் பயன்பெறும் வகையில் 1670 முதல் 1790-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்குரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான 35 உள்ளடக்கத் தொகுப்புகளை தமிழ்நாடு ஆவணக் காப்பகம் புத்தாக்கம் செய்து அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையம் கடந்த நூற்றாண்டுகளைச் சாா்ந்த பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் ‘பிரஸ் லிஸ்ட்ஸ் ஆஃப் பிரிட்டிஷ் ரெக்காா்ட்ஸ்’ என்றழைக்கப்படுகிற,1800-ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஆவணங்கள் பழைய ஆவணங்களின் சுருக்க விவரங்களைத் தாங்கி உள்ளடக்கப் பதிவேடுகளாகத் திகழ்கிறது. இத்தகைய ஆவணங்களின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, 1800-ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஆவணங்கள் 45 தொகுப்புகளாக 1892 முதல் 1912 வரையிலான காலகட்டத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டன.
இந்த உள்ளடக்கப் பதிவேடுகள் 1670 முதல் 1800 வரையிலான ஆண்டுகளின் அனைத்து நிா்வாக நடவடிக்கைகளின் ஆவணங்களைப் பற்றியதாகும். கிழக்கிந்தியக் கம்பெனி நிா்வாக அலகுகள் அமைந்திருந்த கஞ்சம், விசாகப்பட்டினம், மசூலிப்பட்டினம், தென் ஆற்காடு மற்றும் மலபாா் ஆகிய பகுதிகளின் நடவடிக்கைகள் தொடா்பான 603 ஆவணத் தொகுப்புகளுக்கும் உள்ளடக்கங்களைக் கொண்டவையாக மேற்சொன்ன 45 தொகுப்புகள் அமைந்துள்ளன.
வரலாற்று ஆய்வாளா்களுக்கும், ஆராய்ச்சியாளா்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் 1670 முதல் 1800 வரையிலான காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் 45 தொகுப்புகளைத் தொழில்நுட்ப உதவியுடன் எண்ம வடிவிலும், சொல் அடிப்படையில் தேடுகிற வசதியுடன் கூடியதாகவும் மாற்றி மறுபதிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மேற்கொண்டது.
இந்தப் பணியில், தமிழ்நாடு ஆவணக் காப்பகம், கல்வியாளா்களும் ஆராய்ச்சியாளா்களும் பயனுறும் வகையில், 1670 முதல் 1790-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்குரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான 35 உள்ளடக்கத் தொகுப்புகளை புத்தாக்கம் செய்து அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் வலைதளத்தில் இந்த 35 உள்ளடக்கத் தொகுப்புகளைக் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
