சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த மாணவி எஸ்.ஸ்ரீமதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், டேக்வாண்டோ போட்டியில் தேசிய மற்றும் மாநில அளவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளேன். கடந்த ஆண்டு பிப்ரவரியில் புதுச்சேரியில் கேலோ இந்தியா போட்டிகள் நடந்தன. எனது பயிற்சியாளர் டேக்வாண்டோ போட்டிகளுக்கான தமிழக சங்கத்தின் எதிர் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால், காலதாமதமாகத்தான் இந்த போட்டி குறித்த தகவல் கிடைத்தது. மேலும், இந்தப் போட்டிக்கு இணையத்தில் பதிவு செய்வதற்கான இணையதள இணைப்பும் வழங்கவில்லை. இதனால், நேரில் சென்று விண்ணப்பித்தேன். ஆனால், இணையவழியில் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறி எனக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கவில்லை. இந்தப் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டால், விளையாட்டுத் துறையில் எனது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.