திருநெல்வேலி அல்வா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதில் தரமற்ற அல்வாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உலகப்புகழ் பெற்ற திருநெல்வேலி அல்வா திருநெல்வேலிக்கும் அதன் சுவைக்கும் பெயர்போனது. அந்த பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தரமற்ற அல்வாக்கள் விற்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, திருநெல்வேலி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதாவது சமீபகாலமாக பல்வேறு கடைகளில் திருநெல்வேலி அல்வா என்ற பெயரில் தரமற்ற, கலப்பட அல்வாக்கள் விற்கப்படுவதாகவும் பிரபல கடைகளின் பெயர்களைப் போலவே போலிப் பெயர்களில் கடைகள் இயங்கி வருவதாகவும் உணவு பாதுகாப்புத் துறைக்குத் தொடர் புகார்கள் வந்தன.
இந்தப் புகார்களின் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் தலைமையிலான குழுவினர் இன்று திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள முக்கிய அல்வா கடைகளில் அதிரடி சோதனையைத் தொடங்கினர்.
கடைகளில் முறையான உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா, அது புதுப்பிக்கப்பட்டுள்ளதா, உரிமம் பெறப்பட்ட பெயரிலேயே கடை இயங்குகிறதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
லேபிளிங் விதிமுறைகள் அல்வா பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் விவரம், இந்திய உணவு பாதுகாப்புத் துறை உரிமம் எண் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளதா என சோதிக்கப்பட்டது. பல கடைகளில் இவை இல்லாமல் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்கப்பட்ட அல்வாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தரமற்ற அல்வாக்கள்
ஆய்வின் போது, தரமற்ற மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அல்வாக்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்கப்பட்ட அல்வாக்கள் கண்டறியப்பட்டன.
பிரபல அல்வா கடைகளின் பெயர்களைப் போலவே ஒலிக்கும் (Sound-alike) பெயர்களை வைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்ட சில கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, "சாந்தி அல்வா" என்ற பெயரில் பல்வேறு அடைமொழிகளுடன் இயங்கிய கடைகள் சோதனையிடப்பட்டன.
சோதனையின் போது கடை உரிமையாளர்களிடம் பேசிய டாக்டர் புஷ்பராஜ், "திருநெல்வேலி அல்வா என்பது ஒரு பிராண்ட். அதன் தரத்தைக் குறைக்கும் வகையில் யாரும் செயல்படக் கூடாது. அல்வா பாக்கெட்டுகளில் உரிய லேபிள்கள் ஒட்டப்பட வேண்டும். உரிமம் இல்லாமல் அல்வா தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற அல்வாக்களை விற்று மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடக் கூடாது" என்று கடுமையாக எச்சரித்தார்.
மேலும், "சந்தேகத்திற்குரிய அல்வா மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும், அதன் முடிவின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
அல்வா வாங்கும் பொதுமக்கள், பாக்கெட்டில் உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் எண் ஆகியவற்றைச் சரிபார்த்து வாங்குமாறும், தரமற்ற அல்வா விற்பனை குறித்துத் தெரியவந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
அடாத மழையிலும் விடாமல் நடந்த இந்த அதிரடி சோதனை, அல்வா தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற தொடர் நடவடிக்கைகள் மூலம் திருநெல்வேலி அல்வாவின் பாரம்பரியமும் தரமும் பாதுகாக்கப்படும் என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Summary
Officials conduct inspection at nellai halwa shops
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லையில் புகையிலை, நெகிழிப் பைகள் பறிமுதல்
பல்லடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய மீன்கள் பறிமுதல்

கம்பம் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறையினா் சோதனை: 17 கிலோ தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்

நாமகிரிப்பேட்டை உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



