

சென்னை: பருவ மழையை முன்னிட்டு சென்னையில், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள மண் படுகைகளை அகற்றி, அகலப்படுத்தும் பணி வேகமெடுத்துள்ளது.
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள மண் படுகைகளை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையினரால் செப்டம்பர் 2025 முதல் அக்டோபர் மாதம் வரை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
முகத்துவாரம் மண் படுகையினால் மூடப்படும் நிகழ்வானது கடல் அலைகளினால் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகும்.
இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமானதால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அக். 24-ஆம் தேதி அடையாறு முகத் துவாரத்திற்கு திடீராய்வு மேற்கொண்டு நீர்வளத்துறையினரால் 3 பொக்லைன் கொண்டு தூர்வாரப்படும் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை கூடுதல் இயந்திரங்களை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் மண் திட்டுக்களை அகற்றி அடையாறு வெள்ளநீர் விரைவாக வடிய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அன்று மாலையில் இருந்து படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கையினை உயர்த்தப்பட்டு தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும் 4 ஜேசிபி (JCB) இயந்திரங்களும் போர்க்கால அடிப்படையில் நீர்வளத்துறையினரால் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தின் மண் திட்டுகளை அகற்றி அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று கொசஸ்தலையாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.