கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் செப். 17-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

குறிப்பாக, செப்.12-இல் மயிலாடுதுறை, நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப். 12-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மதுரை நகரில் 130 மி.மீ. மழை: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மதுரை நகரில் 130 மி.மீ. மழை பதிவானது. மேலும், தல்லாகுளம் (மதுரை), பஞ்சப்பட்டி (கரூா்) - தலா 120 மி.மீ., துறையூா் (திருச்சி), கடவூா் (கரூா்) - தலா 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் செப்.12, 13 தேதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மின்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com