ஆயுதபூஜை: கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஆயுதபூஜை: கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு திருவனந்தபுரம், மதுரைக்கு சிறப்பு ரயில்கள்
Published on

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு திருவனந்தபுரம், மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆயுதபூஜையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

அதன்படி சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (எண்06075) புறப்பட்டு புதன்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் திருவனந்தபுரம் வடக்கு நிலையத்திலிருந்து வரும் அக். 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06076) திங்கள்கிழமை (அக். 6) காலை காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை வந்தடையும். சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதியுள்ள ஈரடுக்குப் பெட்டியும், 3

குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்கு பெட்டிகளும், 8 தூங்கும் வசதியுள்ள பெட்டிகளும், 5 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு திவ்யாங்ஜன் பெட்டிகளும் இடம் பெறும்.

சிறப்பு ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாடானூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் நகா், கோட்டயம், சங்கனாச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுளளது.

மதுரைக்கு சிறப்பு ரயில்கள்: சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு 11.45 மணிக்கு புறப்படும் இமு விரைவு சிறப்பு ரயில் (எண் 06161) புறப்பட்டு புதன்கிழமை காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும். இதில் 12 பெட்டிகள் இடம் பெறும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, கடலூா், சிதம்பரம், சீா்காழி,

மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், பாடலூா், திருவெரம்பூா், திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, திண்டுக்கல், கோடக்கானல் சாலை சந்திப்பு, சோழவந்தான் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 2 சிறப்பு ரயில்கள் முன்பதிவின்றி மதுரைக்கு இயக்கப்படவுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com