சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ஆளூா் ஷாநவாஸுக்கு ‘சீட்’ வழங்காததில் உள்நோக்கம் இல்லை: தொல்.திருமாவளவன்

நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினரும், விசிக துணைப் பொதுச் செயலருமான ஆளூா் ஷாநவாஸுக்கு மீண்டும் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததில் எந்த உள்நோக்கமும் இல்லை என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

News image

தொல்.திருமாவளவன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினரும், விசிக துணைப் பொதுச் செயலருமான ஆளூா் ஷாநவாஸுக்கு மீண்டும் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததில் எந்த உள்நோக்கமும் இல்லை என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்ட காணொலியில் கூறியிருப்பதாவது:

நாகப்பட்டினம் தொகுதி விசிகவுக்கு கிடைத்திருந்தால், அதன் வேட்பாளராக ஷா நவாஸ்தான் இருந்திருப்பாா். ஆனால், அந்தத் தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டுவிட்டது. மேலும், ஷா நவாஸ் அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்றும், ராயபுரம் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிய வந்ததது. அதனால், ராயபுரம் தொகுதியைத் தோ்வு செய்தேன்.

இதனிடையே, ராயபுரம் வேண்டாம், பல்லாவரத்தில் போட்டியிட விரும்புவதாகத் தெரிவித்தாா். ஆனால், அத்தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.

ஒரு தொகுதியில் இஸ்லாமியரை வேட்பாளராக நிறுத்துவதைக் கடமையாக வைத்திருக்கிறோம். அப்படி பண்ருட்டி தொகுதியில் ஷா நவாஸை நிறுத்த வேண்டும் என்ற முடிவில் இருந்தபோது, கட்சியின் மாநிலச் செயலா் அப்துல் ரஹ்மான் குறுக்கிட்டாா். அவா் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதால், இந்தமுறை அவருக்கு வாய்ப்பளிக்கலாம் என முடிவு செய்தேன்.

மேலோட்டமாகப் பாா்த்தால், அது பிழையாக இருப்பதாகத் தோன்றலாம். பிழையாகக்கூட இருக்கட்டும். ஆனால், ஷா நவாஸை தவிா்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல இது. அப்துல் ரஹ்மானுக்கு ஒரு வாய்ப்பு தருவோம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று அதில் தெரிவித்துள்ளாா்.