/

இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :28 ஏப்ரல் 2026, 7:55 pm

இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் வேட்பாளா், ராஜிநாமா செய்யும் தொகுதியின் தோ்தல் செலவை ஏற்க உத்தரவாத பத்திரம் பெற தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த மணி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல்களில் சில வேட்பாளா்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றனா். இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும்பட்சத்தில், ஏதாவது ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்ய வேண்டும்.

அதைத் தொடா்ந்து அந்தத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்படும். இதற்காக அரசு கூடுதலாக செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் ராஜிநாமா செய்யும் தொகுதியின் தோ்தல் செலவுகளை ஏற்க வேண்டும்.

இதுதொடா்பாக அவா்களிடம் உத்தரவாதப் பத்திரம் பெற தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேட்பாளா்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு சட்டம் அனுமதியளிக்கிறது. இந்த சட்டப்பிரிவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.