அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

முதல்வர் விஜய்.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 9:35 am IST

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது.

புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டு, இதற்காக, மாளிகையின் 10-வது தளத்தில் புதிய முதல்வர் அறை, தனிச் செயலர்களுக்கான அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வரின் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகளுக்காக ரூ.5.54 கோடியில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை டெண்டர் கோரியிருந்தது.

முதற்கட்டமாக இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள 'கட்டிடக் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டம்-1' கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மொத்தம் 3 பிளாக்குகளாக இந்தப் பணிகள் பிரிக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Story image

அதன்படி, பிளாக் 1-ல் ரூ.2.41 கோடிக்கு நிர்வாக அலுவலக வசதிகளை மேம்படுத்தவும், பிளாக் 2-ல் ரூ.2.01 கோடியில் உள் கட்டமைப்பு பணிகளுக்கும், பிளாக் 3-ல் ரூ.1.12 கோடிக்கு இதர பணிகளுக்கும் என ரூ.5.54 கோடியில் டெண்டர் கோரப்பட்டது.

இந்த நிலையில், முதல்வரின் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகளுக்காக தமிழக அரசின் பொதுப்பணித் துறை கோரிய டெண்டரில் பல்வேறு முறைகேடுகளும் விதிமீறல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வரின் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர், ஆக.13 ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டு, 4 நாள்கள் கழித்து 17 ஆம் தேதிதான் இணையதளத்தில் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகள் ரூ. 50 லட்சத்திற்கு மேல் இருந்தால், இணையவழியில் வெளியிடப்படுகின்றன. மேலும், ரூ.2 கோடிக்கு மேல் உள்ள டெண்டர்களை சமர்ப்பிக்க, 30 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ள நிலையில், இந்த டெண்டருக்கு 15 நாள்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, நாளிதழ்களில் வெளியான டெண்டரின் மதிப்பு ரூ. 5.54 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இணையத்தில் வெளியான டெண்டரில் தொகை குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. டெண்டர் ஆவணங்களை இணையதளத்தில் வெளியிடும்போது மொத்த மதிப்பு வெளியிட வேண்டும். ஆனால் இதுவரை இணையத்தில் வெளியிடப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் என்று, முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் அலுவலக பணிக்கான டெண்டரில் விதிமீறல் கண்டறியப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Summary

Contrary to the TVK Govt claims and promise of transparency in tenders, the ₹5.54-crore tender for CM Vijay’s 10th-floor Sea-View office at Namakkal Kavignar Maligai has been kept opaque and deviates from mandatory tender procedures

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.