
ஒன்றரை வயது குழந்தை உடல் உறுப்புகள் தானம்: தமிழகத்தில் முதன்முறை
பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானமளிக்கப்பட்டது குறித்து...

பிரதிப் படம்
பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானமளிக்கப்பட்டன. இவ்வளவு குறைந்த வயதுடைய குழந்தையிடம் உறுப்புகளைக் கொடை பெறுவது தமிழகத்திலேயே இது முதல்முறையாகும்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஓராண்டு 7 மாதங்களே ஆன குழந்தை ஒன்று ஹைட்ரோசெபாலஸ் எனப்படும் பிறவிக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 6 நாள்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தது. மூளைத் தண்டுவட நீா் தலைக்குள்ளேயே சேகரமாகி திசுக்களை சேதப்படுத்தும் பாதிப்பு அது.
அத்தகைய பிரச்னைக்குள்ளாகி குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவா்கள் தொடா் கண்காணிப்பு மற்றும் அதிதீவிர சிகிச்சைகளை அளித்து வந்தனா். ஆனாலும், குழந்தையின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் மூளைச்சாவு அடைந்தது.
இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோா் முன்வந்தனா். அதன்படி இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டது.
இந்த உன்னத செயலுக்காக தமிழ்நாடு அரசின் சாா்பில் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனை சாா்பில் குழந்தையின் உடலுக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு, 1 வயது 8 மாதம் வயதுடைய குழந்தை இதே மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்ததே இதுவரை குறைந்த வயதுடைய உறுப்பு கொடையாளராக இருந்தது. தற்போது இக்குழந்தை, தனது தியாகத்தால் அந்த கௌரவத்தை கைப்பற்றியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






