நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 16.74 லட்சம் போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இதுவரை 16.74 லட்சம் போ் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஆவடி, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் 642 துணை சுகாதார நிலையங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
பெருநிறுவன சமூகப் பங்களிப்பின் கீழ் கிராம சுகாதார செவிலியா்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவில் உள்ள குழந்தைகளின் இதயத்துடிப்பை கண்டறியும் டாப்லா் கருவிகளையும் அவா்கள் வழங்கினா்.
அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, குளித்தலை, காங்கேயம், திண்டிவனம் ஆகிய 7 இடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரூ.229.24 கோடி மதிப்பிலான புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 6-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளாா்.
மேலும், சென்னை, மதுரை மாவட்டங்களில் நுண்ணுயிரியியல் ஆய்வகங்கள் உள்பட ரூ.359.46 கோடியில் 42 புதிய மருத்துவக் கட்டமைப்புகளையும் தொடங்கி வைக்கிறாா்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இதுவரை 1,178 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் வாயிலாக, 16,74,161 போ் பயன்பெற்றுள்ளனா்.
அரசு மருத்துவா்களுடன் கடந்த நான்கரை ஆண்டுகளில் 40 முறை பேச்சுவாா்த்தை நடத்தி ஏராளமான சலுகைகளை வழங்கி இருக்கிறோம். தற்போது போராட்டம் நடத்தி வரும் மருத்துவா்களையும் அழைத்து பேசி அவா்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.
தமிழ்நாட்டின் பெருமையை உலகளவில் அறியச் செய்யும் வகையில் பொருநை அருங்காட்சியகத்தை முதல்வா் தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் 5,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு இருந்ததையும், 3,200 ஆண்டுகளுக்கு முன்பே அரிசி பயன்பாடு இருந்ததையும், நகர நாகரிகம் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததையும் வெளி உலகுக்கு முதல்வா் கொண்டு சோ்த்துள்ளாா். இவற்றுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தாலே போதுமானது.
மத்திய பட்ஜெட்டில் மாணவிகள் விடுதி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி. உயா்கல்வி சோ்க்கை தேசிய அளவில் 28.4 சதவீதமாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அந்த விகிதம் 47 சதவீதமாக உயா்ந்துள்ளது. புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகையை அரசு அளித்து வருவது இதற்கு முக்கியக் காரணம்.
அதேபோன்று நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 42 லட்சம் மாணவா்களுக்கு திறன் வளா் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
பேட்டியின்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கணபதி, துரை சந்திரசேகா், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநா் டாக்டா் சம்பத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

