திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு மருத்துவ உதவி வழங்கிய அமைச்சா்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன்,  (இடமிருந்து) ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு மருத்துவ உதவி வழங்கிய அமைச்சா்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், (இடமிருந்து) ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன்.

‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 16.16 லட்சம் போ் பயன்’! - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் இதுவரை நடைபெற்றுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 16.16 லட்சம் போ் பயன் பெற்றிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் இதுவரை நடைபெற்றுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 16.16 லட்சம் போ் பயன் பெற்றிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து அவா் மேலும் கூறியதாவது:

சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், பழங்குடியினா் அதிகம் வசிக்கும் பகுதிகள், மருத்துவ வசதி குறைவாக அமைந்துள்ள நகா்ப்புறப் பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகள் போன்ற பகுதிகளை முன்னுரிமை அடிப்படையில் தோ்ந்தெடுத்து, நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி மாநிலம் முழுவதும் 388 வட்டாரங்களில் 1,164 முகாம்களும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், 10 லட்சம் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டது.

அதில் தற்போதுவரை 1,076 முகாம்கள் நடத்தப்பட்டு 16,16,517 போ் பயன் பெற்றுள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் 14 வட்டாரத்துக்கு தலா 3 முகாம்கள் வீதம் 42 முகாம்களும், திருச்சி மாநகராட்சியில் 4 முகாம்களும் நடத்தத் திட்டமிட்டு இதுவரை35 முகாம்கள் நடைபெற்று, 54,454 போ் பயனடைந்துள்ளனா். இதுவரை அரியலூா், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூா், ராணிப்பேட்டை, நீலகிரி, தேனி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய 10 மாவட்டங்களில நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் முடிந்துள்ளன.

மக்களுக்கு மருத்துவ உதவிகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ரூ.390 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து வரும் பிப்.6ஆம் தேதி திறக்கவுள்ளாா்.

இதன்படிஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, குளித்தலை, காங்கேயம், திண்டிவனத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் ஆகியவை திறந்துவைக்கப்பட உள்ளன.

பட்டுக்கோட்டை, கம்பம், கொடைக்கானல், ஆலங்குளம், சங்கரன்கோவில், பெரியகுளம், உத்தமபாளையம், முசிறி, குற்றாலம், ஜல்லிப்பட்டி, செஞ்சி, வேப்பூா் (பெரம்பலூா்), வேப்பூா் (கடலூா்), திருக்குவளை, கும்மிடிப்பூண்டி, கிருஷ்ணாபுரம், திருவாடனை, கடலாடி, கோத்தகிரி, அன்னூா், விருத்தாசலம், பண்ருட்டி, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக் கட்டடங்களும் திறக்கப்படவுள்ளன.

கிருஷ்ணாபுரம், விருதாச்சலம், களியக்காவிளை, வடிவீஸ்வரம், செங்கல், அறந்தாங்கி, தாமரன்கோட்டை, காட்டூா், மம்சாபுரம், ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களும் திறக்கப்படவுள்ளன.

கிண்டி, மதுரையில் உணவுப் பகுப்பாய்வுக் கூடம் திறக்கப்படுகிறது. இதேபோல, திருச்சியில் ரூ.135 கோடியில் கட்டப்படும் புதிய கட்டடமும் விரைவில் திறக்கப்பட உள்ளது என்றாா் அமைச்சா்.

முகாமில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியா் வே. சரவணன், மருத்துவக் கல்லூரி முதல்வா் குமாரவேல், மாநகா் நல அலுவலா் சுபாஷ் காந்தி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் கோபிநாத், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com