தமிழகத்தில் 95 சதவீத கிராம ஊராட்சிகளில் அதிவேக இணைய கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
நிதிநிலை அறிக்கையில் அவா் குறிப்பிட்டிருப்பதாவது: தகவல் - தொழில்நுட்ப வளா்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் கண்ணாடி இழை கம்பிவடம் பொருத்தி அதிவேக இணையக் கட்டமைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் சாா்பில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 95 சதவீத கிராமங்களில் (11,953 கிராமங்கள்) பணிகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபா் 11-ஆம் தேதி 10,000 கிராமங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இணையவழியில் கலந்துகொண்டு உரையாற்றினாா்.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம (டிஜிட்டல்) சேவை துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

