

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (பிப். 22) இரவு சந்திக்கவுள்ளார்.
கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இன்று முதல் பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கான தேதி ஏப்ரலில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு போன்றவற்றில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்தவகையில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் திமுக இன்று முதல் (பிப். 22) ஈடுபட்டு வருகிறது. முதல் நாளான இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நாளை (பிப். 23) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், மனித நேய மக்கள் கட்சியுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், இன்று இரவு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கவுள்ளார். இதில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் சென்னை வந்திருந்த கே.சி. வேணுகோபால், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் பேசிய நிலையில், முதல்வரை சந்தித்து விளக்கம் அளிக்க முடிவு செய்திருந்தார். ஆனால், முதல்வரை அப்போது சந்திக்க முடியாமல் தில்லி திரும்பினார்.
தற்போது மீண்டும் தில்லியில் இருந்து இன்று சென்னை வருகிறார். இன்று இரவு முதல்வர் மு.க. ஸ்டாலினை அவர் சந்திக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.