

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மனிதநேய மக்கள் கட்சியுடன் நாளை (பிப். 23) திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிப். 27ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (சிபிஐ) பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுடன் இன்று (பிப். 22) முதல் திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் முதல் வாய்ப்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று, திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை (பிப். 23) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், மனித நேய மக்கள் கட்சியுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சிகளுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிப். 26 ஆம் தேதி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (சிபிஎம்) திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல்ராஜ், கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதனை அடுத்து பிப். 27 ஆம் தேதி தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. திமுக கூட்டணியில் கூடுதலான இடங்களைக் கேட்டுப் பெறுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் முன்னதாக தெரிவித்திருந்தார்.
கூட்டணிக் கட்சிகளுடன் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, கே.என். நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இம்முறை பேரவைத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிகவும் இணைந்துள்ளதால், கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் திமுக கண்டிப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.