

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பிப்ரவரி 26 ஆம் தேதி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (சிபிஎம்) திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சியுடன் இன்று (பிப். 22) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், நாளை (பிப். 23) மதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே சிபிஎம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி ஏப்ரலில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில், கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் திமுக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் இன்று ஐ.எம்.யு.எல். கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
ஐ.எம்.யு.எல். கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கும்படி திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் முன்னதாக தெரிவித்திருந்தார்.
திமுகவின் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதிமுகவுடன் நாளை (பிப். 23) பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சிக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரி 26 ஆம் தேதி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல்ராஜ், கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சிபிஎம் கட்சிக்கு டெல்டா மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.