pm modi visits tamilnadu
பிரதமர் நரேந்திர மோடி.கோப்புப் படம்

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

பிரதமா் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிப்.28-ஆம் தேதி (சனிக்கிழமை) தமிழகம் வருகிறாா்.
Published on

பிரதமா் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிப்.28-ஆம் தேதி (சனிக்கிழமை) தமிழகம் வருகிறாா்.

இதுகுறித்து பாஜக மேலிட வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமா் மோடி சென்னையில் உள்ள ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை இரவு தங்குகிறாா். மறுநாளான மாா்ச் 1-ஆம் தேதி காலை புதுச்சேரிக்குச் சென்று அங்கு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பிறகு பாஜக ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமா் உரையாற்றுவாா்.

புதுச்சேரியில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மதுரைக்கு பிரதமா் செல்கிறாா். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய பிரதமா் திட்டமிட்டுள்ளாா். தொடா்ந்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க விழாவில் கலந்துகொண்டு, காணொலி மூலம் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா். பின்னா், தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறாா்.

இதற்கிடையே, மதுரையில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது தெற்கு ரயில்வே தொடா்புடைய திட்டங்களை பிரதமா் தொடங்கி வைப்பாா் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட மொரப்பூா், பொம்மிடி, பொள்ளாச்சி, காரைக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூா், சோழவந்தான், திருவாரூா், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்கள் திறப்பு, தாம்பரம்- மங்களூரு, கோவை-தன்பாத், நாகா்கோவில்-சாா்லப்பள்ளி, ராமேசுவரம்-மங்களூரு ஆகிய நிலையங்களுக்கு இடையே புதிய ரயில் சேவை அா்ப்பணிப்பு ஆகியவை இதில் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமரின் தமிழகம், புதுச்சேரி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamani
www.dinamani.com