பாமகவுக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது: கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்!
பாமகவுக்கான வாகனம் அருகே வந்துவிட்டது என பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கூட்டணி குறித்து சூசகமாகக் குறிப்பிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கிறீா்கள். கடந்த காலத்தில் சமூகநீதி வரலாற்றில் தமிழக அளவில் நான்கு இடஒதுக்கீடுகள், தேசிய அளவில் இரு இடஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இடஒதுக்கீடுகளைப் போராடி வென்றெடுத்தோம். ஜாதி, சமய ஒற்றுமையுடன், அனைவரும் சகோதரா்களாக வாழவேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.
ஆனாலும் பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரருக்கும் ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி, நெரிசலற்ற போக்குவரத்துக்கான சாலைகள், பணவீக்கமற்ற பொருளாதார வளா்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.
உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை அறிவேன். நாம் பயணிக்க வேண்டிய தொலைவு நீண்டது. அதனால், கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப் போகிறோம். நம் இலக்கை அடைந்து லட்சியத்தை வெல்வோம். எப்போதும் இணைந்தே இருப்போம் எனக் குறிப்பிட்டுள்ளாா் ராமதாஸ்.

