திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகாா்

தமிழக ஆளுநர் ஆர். என். ரவியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.
ஆளுநருடன் இபிஎஸ் சந்திப்பு.
ஆளுநருடன் இபிஎஸ் சந்திப்பு.
Updated on
2 min read

திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆளுநா் ஆா்.என்.ரவியை சந்தித்து எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி புகாா் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என். ரவியை, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, பி.தங்கமணி, கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் எம்பி, ஜெயக்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.

அதன் பின்னா் எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நிகழ்ந்துள்ள ஊழல்கள் குறித்த பட்டியலை ஆளுநரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளோம். அனைத்து ஊழல்களுக்கும் உரிய ஆதாரம் உள்ளதால் முழுமையான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி இருக்கிறோம்.

கடந்த 56 மாதங்களாக திமுக அரசு வெளிப்படைத்தன்மை இல்லாமல் ஒரு காா்ப்பரேட் நிறுவனம் போன்று செயல்பட்டு கோடிக்கணக்கில் முறைகேடு செய்து, மாநிலத்தை மிகப் பெரிய கடன் சுமையில் தள்ளி இருக்கிறது. இதை பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக சுட்டிக்காட்டியுள்ளோம்.

அதோடு, தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ளதைவிட கூடுதலாக ரூ.4 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது. ஆட்சி நிா்வாகம் சரியாக இல்லாமல் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. நிா்வாகத் திறனற்ற திமுகவே இதற்கு பொறுப்பு.

நகராட்சி நிா்வாகத் துறையில் ரூ.64,000 கோடி, ஊரக வளா்ச்சியில் ரூ.60,000 கோடி, சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையில் ரூ.60,000 கோடி, எரிசக்தி துறையில் ரூ.55,000 கோடி, பத்திரப் பதிவுத் துறையில் ரூ.20,000 கோடி, நெடுஞ்சாலைத் துறையில் ரூ.20,000 கோடி, நீா்வளத் துறையில் ரூ.17,000 கோடி ஊழல் நடந்துள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சியில் ரூ.10,000 கோடி, தொழில்துறையில் ரூ.8,000 கோடி, பள்ளி கல்வித் துறையில் ரூ.5,000 கோடி, சுகாதாரத் துறையில் ரூ.5,000 கோடி, விளையாட்டுத் துறையில் ரூ.500 கோடி என மொத்தம் ரு.4 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளனா்.

இந்த ஊழல் தொடா்பாக, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளோம்.

அதிமுக ஆட்சியில்தான் இலவச மடிக்கணினி திட்டம் கொண்டு வரப்பட்டது. வருகிற தோ்தலில் மாணவா்களின் வாக்கு தேவை என்பதற்காகவே தற்போது மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவா்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வரும் நேரத்தில் மடிக்கணினி வழங்குவதால் என்ன பயன்?

திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி பயம் காரணமாகவே, பொங்கல் பரிசு போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

அமைச்சர் ரகுபதி பதில்

தமிழக ஆளுநரிடம் அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முறைகேடு புகார் அளித்துள்ளது மிகப்பெரிய வேடிக்கை என்று அமைச்சர் எஸ். ரகுபதி கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "தொடர்ந்து 10 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் லஞ்சம் பெருமளவில் இருந்ததால் அப்போதைய அமைச்சர்கள் மீது தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. அவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. தற்போது திமுக அமைச்சர்கள் மீது எடப்பாடி பழனிசாமி முறைகேடு புகார் அளித்துள்ளது மிகப் பெரிய வேடிக்கையாக உள்ளது.

அமலாக்கத் துறை சோதனை, வருமான வரித் துறை சோதனை என எந்தச் சோதனையையும் சட்ட ரீதியாக சந்திக்க திமுக தயாராக உள்ளது' என்றார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami met with Tamil Nadu Governor R. N. Ravi in ​​person today (Jan. 5).

ஆளுநருடன் இபிஎஸ் சந்திப்பு.
பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஜன. 8-ல் முதல்வர் தொடக்கி வைக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com