தமிழக காவல் துறையினருக்கு 4,000 பதக்கங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக காவல் துறை மற்றும் சீருடை பணியாளா்கள் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 4,184 பேருக்கு பதக்கங்களை வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்த உத்தரவின் விவரம்:
தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி, சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் சிறப்புப் பணி சேவைகள் ஆகிய துறைகளின் பணியாளா்களின் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டு, காவல் துறையில் 4,000 பணியாளா்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 120 அலுவலா்களுக்கும், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையில் 58 அலுவலா்களுக்கும் ‘தமிழக முதல்வரின் சிறப்பு பணிப்பதக்கங்களும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞா்கள் பிரிவுகளில் 6 அதிகாரிகளுக்கும் ‘தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப மற்றும் சிறப்புப் பணிப் பதக்கமும் வரும் பிப். 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
