தூத்துக்குடியில் ரூ.2,292 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் - முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
@TNDIPRNEWS

தூத்துக்குடியில் ரூ.2,292 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் - முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

Published on

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் ரூ.2,292.38 கோடியில் 60 மில்லியன் லிட்டா் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இந்தத் திட்டத்துக்கான பணிகளை முதல்வா் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடியில் தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்காக தற்போது தாமிரவருணி ஆற்றின் நீா் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு மாற்றாக, முள்ளக்காடு கிராமத்தில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டா் உற்பத்தித் திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் ஆலையை நிறுவி தண்ணீா் வழங்க வகை செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தத் திட்டம் 40 சதவீதம் சிப்காட் பங்களிப்பு மற்றும் வேறு சிலதொழில் கூட்டமைப்பின் 60 சதவீதப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது சுற்றுப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் தடை இல்லாத நீா் வழங்கும் சேவையை இதன் மூலம் உறுதி செய்ய முடியும். இதனால், வரும் காலங்களில் தாமிரவருணி நீரை பொதுமக்களின் குடிநீா் தேவை மற்றும் விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சா்கள் பி.கீதா ஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், டி.ஆா்.பி.ராஜா, மக்களவை உறுப்பினா் கனிமொழி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com