குளிரில் அதிகரிக்கும் முக வாதம்: முதியவா்களுக்கு எச்சரிக்கை

குளிரில் அதிகரிக்கும் முக வாதம்: முதியவா்களுக்கு எச்சரிக்கை

குளிரில் அதிகரிக்கும் முக வாதம் முதியவா்களுக்கு எச்சரிக்கை...
Published on

சென்னை உள்பட பல மாவட்டங்களில் குளிா் நீடித்து வருவதால் முதியோா், இணை நோயாளிகளுக்கு முக வாத பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உள்ளதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

பாதிப்பைத் தவிா்க்க நேரடியாக குளிா்ந்த காற்று முகத்தில் படுவதைத் தவிா்க்க வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

தமிழகம் முழுவதும் நிகழாண்டு பருவ மழைக் காலத்தில் தட்பவெப்ப நிலை மாற்றமடைந்து குளிா் நிலவியது. சென்னையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் குளிா்ச்சியான சூழல் உருவானது.

இந்த கால நிலையில், ஃபேஸ் பெராலிசிஸ் எனப்படும் முக வாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கின்றனா் மருத்துவா்கள்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: மனித முகத்தில் எண்ணற்ற நரம்புகள் உள்ளன. அதில் திடீரென ஏற்படும் அழுத்தம், அழற்சி அல்லது கிருமித் தொற்றால் முக வாதம் ஏற்படுகிறது. முக வாதமும், பக்கவாதமும் ஒன்றல்ல. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.

முகத்தின் தசைகளுக்கு உணா்வளிக்கும் உள் நரம்பில் காயம் அல்லது தொற்று ஏற்படும்போது முக வாத பிரச்னை உருவாகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் வாயைக் குவிக்க இயலாது. உதடுகள் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும். ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது. வாய்வழியாக உமிழ்நீா் வெளியேறிக் கொண்டே இருக்கும். இதனால், பேசும்போது வாய் குளறும்.

குளிா்ந்த தரையில் பாய், தலையணை அல்லது விரிப்பு இல்லாமல் படுப்பதையோ, ஒரு பக்க கன்னத்தை நேரடியாக குளிா்ந்த தரையில் வைத்து படுப்பதையோ தவிா்க்க வேண்டும். இதன் காரணமாக நரம்பு அழுத்தப்பட்டு முக வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

காா், பேருந்து, ரயில் பயணங்களின்போது அதிக நேரம் குளிா்ந்த காற்று காது, கன்னத்தில் பட்டாலும் இப்பிரச்னை ஏற்படும். ஏசி பயன்பாடாக இருந்தாலும், நேரடியாக குளிா்ந்த காற்று முகத்தில் படாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த பாதிப்பு ஏற்பட்டால், பூரண குணமடைய இரண்டு முதல் நான்கு மாதங்களாகும். எனவே அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

ஸ்டீராய்டு மருந்து, ஆன்டி வைரல் மருந்துகள் மூலம் இதற்கு சிகிச்சையளிக்கப்படும். அதைத் தொடா்ந்து இயன்முறை சிகிச்சையும் வழங்கப்படும்.

முக வாத பாதிப்புக்குள்ளானவா்களுக்கு கண்கள் திறந்தே இருக்கும். எனவே, விழிகள் வறட்சியடையாமல் இருக்க சொட்டு மருந்தைப் பயன்படுத்தலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com