கோவை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைக் குறைக்கும் நடவடிக்கையால் ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்க, வேறு துறைகளில் வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக மாநில வருவாய் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
முதல்வர் சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருவதாகவும், அதை அவர் செய்து வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைக் குறைக்கும் நடவடிக்கையால் ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்க, வேறு துறைகளில் வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் போது, மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்காத வண்ணம் நிதி ஆதாரங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டாஸ்மாக் கடைகள் குறைப்பு நடவடிக்கையால் ஏற்படும் வருவாய் இழப்பை மற்ற துறைகள் மூலம் ஈடு செய்ய மாற்று வழிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தவெகவுக்கு வருமாறு தன்னை வற்புறுத்தி கைது செய்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் கூறுவது முற்றிலும் தவறானது. அனிதா ராதாகிருஷ்ணனை ராஜிநாமா செய்யுமாறும் யாரும் வற்புறுத்தவில்லை என்றும், யார் வற்புறுத்தினார்கள் என்று அவர் கூறினால் அதற்கு பதிலளிக்க முடியும்.தவறு செய்தவர்கள் மீதுதான் காவல்துறை சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிநடத்திய அதிமுகவை எடப்பாடி பழனிசாமி ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி வருகிறார். தனது மகனின் பேச்சைக் கேட்டு அவர் செயல்படுவதால் தான் அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் ஒருவர் பின் ஒருவராக ராஜிநாமா செய்து வருகின்றனர்.
மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பான கேள்விக்கு, மாற்றுக் கட்சியினர் இணைந்தாலும் எங்களது கட்சி தூய்மையானது தான். அரசியல் காரணங்களுக்காக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வேறு, அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது வேறு, யார் மீதும் வழக்குப் பதிவு செய்யலாம்; ஆனால், அவர் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரா என்பதை பார்க்க வேண்டும். நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் யாரும் எங்கள் கட்சியில் இணையவில்லை என்றும் தெரிவித்தார்.
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், அதற்கான பொருத்தமான இடத்தைத் தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். விமான நிலைய விரிவாக்கத்திற்கும் நிலம் தேவைப்படுவதாகவும், அதற்காக தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி மீது விசாரணை நடைபெறுமா என்ற கேள்விக்கு, சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பேரம் பேசப்பட்டதாக எழுந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள மூல காரணம் யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. அதன் பிறகே யார் மீது வழக்கு தொடர வேண்டும் என்பது முடிவு செய்யப்படும் என்றார்.
அதிமுகவில் இருக்கிறோமா இல்லையா என்று தெரியவில்லை என சி.வி. சண்முகம் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அதே கருத்தை எஸ்.பி. வேலுமணியும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் குறித்து முதல்வர் ஜோசப் விஜய் கரூர் சென்று திரும்பிய பிறகுதான் தெரியவரும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அரசுத் துறைகளில் தவறுகள் மற்றும் முறைகேடுகள் நடக்கக் கூடாது என்ற நோக்கோடும், தூய்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவுமே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அடிக்கடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அவர்.
தனது துறையில் தவறுகள் கண்டறியப்படும் இடங்களில் தேவையான மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Summary
Alternative ways to offset TASMAC revenue loss will be explored
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








