திமுக மீண்டும் ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டு வருமென கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுகவினருக்காக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, “மக்கள் பணியே எல்லாவற்றையும் விட மகத்தானது. மக்களுக்காக உழைப்பதே நம் கடமை” என்று அண்ணா அறிவாலயத்தில் திருவுருவச் சிலையென நிற்கும் பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் நிதமும் அறிவுறுத்துகின்றனர்.
“சோதனைகள் நமக்கென்ன புதிதா? அந்த நெருப்பாறுகளை நீந்திக் கடப்போம் வா” என்று கம்பீரமாய் எழுந்து நிற்கும் கற்கோட்டையான அறிவாலயத்தின் வாயில் தினமும் வரவேற்கிறது.
கழக நிர்வாகிகள் - கழக முன்னோடிகள் தொடங்கி, கழகத்தின் மீது பற்றுக்கொண்ட ஆதரவாளர்கள் எனக் குழந்தைகள் - மாணவர்கள் - இளைஞர்கள் - பெண்கள் - முதியோர் என நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் என்னைக் காண வருகின்றனர். அப்படி வரும் ஒவ்வொருவரிடமும் பேசி, அவர்களது எண்ணங்களையும் - உணர்வுகளையும் நான் அறிந்து வருகிறேன்.
ஒவ்வொருவரின் குரலும் சொற்களும்தான் வேறுபடுகிறதே தவிர, அனைவரது உணர்வும் ஒன்றுதான். அவர்கள் என்னிடம் சொல்வதெல்லாம், “நாங்க இருக்கோம். நாம மீண்டும் வருவோம்”. இந்தச் சொற்கள் போதுமே, எதிரிகளை ஒருசேர வீழ்த்தும் வலிமையைக் கொடுக்க!
இந்த வலிமையை நீங்கள் கொடுப்பதால்தானே 75 ஆண்டுகளைக் கடந்தும், கம்பீரமாக நிற்கிறோம்.
வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள்… நம்மைப் போல் வெற்றி பெற்றவர்களும் இல்லை; தோல்வியைக் கண்டவர்களும் இல்லை. வெற்றியை நாம் தலையில் ஏற்றிக்கொண்டதுமில்லை; தோல்வியை இதயத்தில் தாங்கிக்கொண்டதுமில்லை! அதனால்தானே ஃபீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம்.
இன்று நாட்டில் நடக்கும் காட்சிகளைப் பாருங்கள்… ஒரு சில இயக்கங்களால் ஒரு தோல்வியைக்கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஆனால் நாம், கொள்கை உறவாலும் - உடன்பிறப்பு எனும் நேசத்தாலும் பிணைக்கப்பட்டு, ஒரு குடும்பம் என ஆல் போல் வேரூன்றி வளர்ந்து நிற்கின்றோம்.
அப்படிப்பட்ட நம் இயக்கம் அடுத்த நூறாண்டுகளுக்குப் பயணிக்க வேண்டிய திசையைத் தீர்மானிக்க வேண்டியதும், உங்கள் உணர்வுகளை உள்வாங்கி அதில் புதிய பாதையை அமைக்க வேண்டியதும் தலைமைத் தொண்டனான என் கடமையல்லவா!
அதனால்தான், 38 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று, உங்களின் உள்ளங்களை அறிந்து வந்து, ஒளிவுமறைவின்றி என்னிடம் வழங்கச் சொன்னேன். அதுமட்டுமின்றி, உங்கள் குரல் ஒலித்திட எவ்வித தயக்கமும் கூடாதென “உடன்பிறப்பின் குரல்” என்ற இணையதளத்தையும் உருவாக்கினேன்.
காலை அறிவாலயத்தில் உங்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்பதும், மாலை தொடங்கி இரவு வரை நீங்கள் பதிவு செய்த கருத்துகளைப் படிப்பது எனவும் அன்றாடம் உங்களின் எண்ணங்களை ஆய்ந்தறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
உங்களது எண்ணங்களின் அடிப்படையில், கழகத்தின் மறுசீரமைப்பிற்காக - மறுகட்டுமானத்திற்காக, இளமையும் அனுபவமும் கலந்த “மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு”வையும் இப்போது அமைத்திருக்கிறேன்.
“தி.மு.க.வைப் போல் அமைப்புரீதியான பலம் கொண்ட வேறு கட்சி, இந்தியாவிலேயே கிடையாது” என்பதை நான் பல்வேறு மேடைகளில் சொல்லி இருக்கிறேன். நான் மட்டுமல்ல, பிற இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் - பிற மாநிலத் தலைவர்களும் - அரசியல் நோக்கர்களும்கூட இந்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அத்தகைய பலம் பொருந்திய அமைப்பு எழும்போது மலையென நிற்க வேண்டும்! கதிரவன் என ஒளி வீச வேண்டும். அந்த ஒளியில் அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான நமது வரலாற்றையும் தமிழ்நாட்டின் புது வரலாற்றையும் நாம் ஒருசேர எழுத வேண்டும்.
இந்தப் பணிகளை எல்லாம் ஒப்படைத்துள்ள நிலையில்தான், நான் இன்று அயலகப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இருவாரங்கள் அயலகத்தில் இருந்தாலும், அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்; அங்கு நாள்தோறும் வரும் உங்கள் முகங்கள் தான் என் நெஞ்சில் நிழலாடும்” என்று கூறியுள்ளார்.
Summary
Rising again like the phoenix, says DMK Chief M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






