தமிழ்நாட்டில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும் இது நம்ம இயக்கத்தின் தலைவருமான அண்ணாமலை, நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், “தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள், தற்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், இந்தக் கல்வியாண்டிலேயே 600 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியிருப்பது, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
இதனால், 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களே முதலில் பாதிக்கப்படுவார்கள்” என்று நாளிதழ்களில் வெளியான செய்திகளில் ஆதரத்துடன் பதிவிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலமாக புறநோயாளிகள் பிரிவு சேவைக்கான முன்பதிவு செய்யும் வசதியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஜூலை 8) காலை தொடங்கிவைத்தார். அதன்பின்னர், 650 மருத்துவக் கல்வி இடங்கள் குறைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், “தமிழகத்தில் தனலட்சுமி சீனிவாசன், ஸ்ரீனிவாசன், கற்பக விநாயகா, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு விதிகளை மீறி திமுக அரசு தடையில்லாச் சான்று (என்ஓசி) வழங்கியுள்ளது. தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறியுள்ளதால் அவை அரசு ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதில்லை.
கடந்த திமுக ஆட்சியில் தனியார் கல்லூரிகளுக்கு விதிகளை மீறி தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் அருண்ராஜுக்கு நன்றி தெரிவித்து பல்வேறு கேள்விகளை இது நம்ம இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் கூறியிருக்கிறார்.
எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்?
இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது? இந்தக் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே போதாது.
இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவுடன் இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை, தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்ல முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Annamalai has stated that the Minister has not yet responded regarding the loss of 600 MBBS seats in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்

நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்

எம்பிபிஎஸ்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒப்புகைச் சான்று தேவையில்லை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK



