FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

கரூர் பலி: அரசுப் பணி வழங்கலாம்; ஆனால்...! மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கப்படுவதற்கு எதிரான வழக்கு...

News image

உயா்நீதிமன்ற மதுரைக் கிளை - கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 11:21 am IST

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேநேரத்தில் இன்று வழங்கப்படும் அரசுப் பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு செப். 27 ஆம் தேதி தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய் தலைமையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அவர்களுக்கு அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் நிதியுதவி வழங்கப்பட்டது.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 32 பேருக்கு இன்று கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், அரசுப் பணி ஆணை வழங்கவுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேநேரத்தில் இன்று வழங்கப்படுவது, தற்காலிக பணி நியமன ஆணையாக மட்டுமே இருக்க வேண்டும், இந்த வழக்கு முடியும்வரை இப்படியே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் விஜய் தற்போது கரூர் நிகழ்ச்சிக்கு பயணத்தில் இருப்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்பதால் இப்போது தற்காலிக அரசுப் பணி வழங்கட்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

போட்டித் தேர்வர்களுக்கு இது பாதிப்பை உண்டாகும் என்று வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் டிஎன்பிஎஸ்சியை எதிர்மனுதாரராக சேர்த்து ஜூலை 21 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாதங்கள் என்னென்ன?

அப்போது விசாரணையின் தொடக்கத்திலேயே, 'கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பொருளாதார உதவி தேவைதானே? அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர், "பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப்பணி எதற்கு?

உச்சநீதிமன்றத்தில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது அரசுப் பணி வழங்குவது சரியல்ல. இது சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பாக அமையும்.

கரூர் சம்பவங்கள் போன்ற எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளிலும் இவ்வாறு நடந்தால் அரசுப்பணி கோர வாய்ப்புள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் நடந்த கும்பகோணம் மகாமகம் நிகழ்வு, தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆகிய சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் யாருக்கும் அரசுப் பணி வழங்கப்படவில்லை.

கருணை அடிப்படையில் பணி வழங்கும் விதிமுறைகள் எதுவும் இதில் பின்பற்றப்படவில்லை. இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்களுக்கு புதிய விதிகளை உருவாக்க வேண்டும்" என்று வாதங்களை முன்வைத்தார்.

அப்போது 'கரூரில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுப்பணி வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் அறிவிக்கப்படவில்லையா?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனுதாரர், 'சட்டப்பேரவையில் அறிவிப்பு இல்லை. அதுபோல இவர்களுக்கு அரசுப் பணி வழங்கினால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோர், டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு முயற்சிக்கும் போட்டித் தேர்வர்களுக்கு ஏமாற்றமாக அமையும்' என்றும் கூறினார். இதன்பின்னர் டிஎன்பிஎஸ்சியை எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Summary

karur stampede: Govt job could be granted but one condition: Madurai HC Bench

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.