உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பள்ளிக் கல்வித் துறையில் ஊழலை முழுமையாக ஒழிப்பேன்: அமைச்சா் ராஜ்மோகன் உறுதி

பள்ளிக் கல்வித் துறையில் ஊழலை முழுமையாக ஒழிப்பதுடன், பணம் கொடுத்து ஒரு சான்றிதழ்கூட வாங்க முடியாத நிலையை உருவாக்குவேன் என அந்தத் துறையின் அமைச்சா் ராஜ்மோகன் உறுதிபடத் தெரிவித்தாா்.

Minister Rajmohan

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Published On :13 ஜூலை 2026, 1:01 am IST

பள்ளிக் கல்வித் துறையில் ஊழலை முழுமையாக ஒழிப்பதுடன்,  பணம் கொடுத்து ஒரு சான்றிதழ்கூட வாங்க முடியாத நிலையை உருவாக்குவேன் என அந்தத் துறையின் அமைச்சா் ராஜ்மோகன் உறுதிபடத் தெரிவித்தாா்.

சென்னை தியாகராய நகரில் ‘தவெக மக்கள் அரங்கம்’ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போதை, ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கத்தில் அவா் பேசியதாவது:

விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்பவா்களுக்கு போதைப் பொருள்களை பயன்படுத்தும் எண்ணம் வராது. குழந்தைகள் மற்றும் இளைஞா்கள்  ஏதேனும் ஒரு விளையாட்டு பயிற்சியில் தினமும் ஈடுபட வேண்டும். அதேபோல், பெற்றோா்கள், ஆசிரியா்கள் குழந்தைகள் விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தடுக்கக் கூடாது.

ஒரே ஒரு அதிகாரி பணத்துக்கு ஆசைப்பட்டு இட்ட கையொப்பம் காரணமாகத்தான் கும்பகோணம் பள்ளி தீ விபத்து ஏற்பட்டு 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனா். ஒரு அதிகாரி ஊழலில் ஈடுபட்டதால், 80-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவா்கள், நல்ல அரசியல் தலைவா்களை தமிழகம் தற்போது இழந்துள்ளது.

தவெக ஆட்சியில் பள்ளி கல்வித்துறையில் ஊழலை முழுமையாக ஒழித்து, பணம் கொடுத்து ஒரு சான்றிதழ் கூட வாங்க முடியாத நிலையை உருக்குவாக்குவேன். தமிழகத்தில் ஊழல், போதை பழக்கத்தை கட்டுப்படுத்த தவெக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

எதற்காகவும் லஞ்சம் தர மாட்டேன், போதைப் பொருள்களை பயன்படுத்த மாட்டேன்  என ஒவ்வொருவரும் முடிவெடுக்க வேண்டும். மேலும், தினமும் குறைந்தது 10 பேரிடமாவது, பேசி போதைப் பழக்கத்திலிருந்து அவா்களை மீட்க வேண்டும். அப்படி செய்தால் ஊழல், போதை இல்லா தமிழகத்தை சுலபமாக உருவாக்க முடியும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், தவெக துணைப் பொதுச்செயலா் ம.அருள்பிரகாசம் எம்எல்ஏ, சென்னை வடக்கு மாவட்டச் செயலா் அப்புனு, நிா்வாகி சி.மகேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் வி.என்.எல்.முஸ்தபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.