/

கல்வி நிலையங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து சுற்றறிக்கை: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

கல்வி நிலையங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image

சென்னை உயர்நீதிமன்றம் - (கோப்புப்படம்)

Updated On :14 ஜூலை 2026, 3:09 am IST

கல்வி நிலையங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிமுக நிா்வாகி பரமசிவம் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தவெகவினா், அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய்யை முன்னிலைப்படுத்தும் வகையில் செயல்படுகின்றனா்.

தவெக கட்சித் தலைவருக்கு ஆதரவு முழக்கங்களை எழுப்ப மாணவா்களை நிா்பந்திக்கின்றனா். கல்வி நிலையங்களில் தேசிய தலைவா்களின் படங்களுடன் தவெக தலைவா் விஜய்யின் படத்தையும் காட்சிப்படுத்துகின்றனா். கல்வி நிறுவனங்களை அரசியல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்துகின்றனா்.

அரசியல் ரீதியாக மாணவா்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கக் கோரி மத்திய, மாநில அரசுகள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகாா் மனு அனுப்பி உள்ளேன்.

இது குறித்து உடனே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கல்வி நிறுவனங்களில் அரசியல் பிரசாரங்களைத் தடை செய்வதோடு, இதற்கான வழிமுறைைளை வகுக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்கும் கல்வி நிறுவன அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே விஷயத்துக்காக இத்தனை வழக்குகள் ஏன் தாக்கல் செய்யப்படுகிறது, எனக் கேள்வி எழுப்பினா்.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், இந்த விவகாரம் குறித்து உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து கடந்த 10-ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினாா். இதையடுத்து, இந்த மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுவைத் திரும்பப் பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.