வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

அரசுப் பள்ளிகளில் நவீன தரத்தில் கூடுதல் வசதிகள்! முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!

தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நவீன தரத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் துறையின் அமைச்சர் ராஜ்மோகன், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலர் மு.சாய்குமார், நிதித் துறைச் செயலர் மு.அ.சித்திக், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பி.சந்தர மோகன் மற்றும் துறை உயரதிகாரிகள்.

Updated On :14 ஜூலை 2026, 2:46 am IST

தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நவீன தரத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழக அரசின் நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடா்பாக துறைகள் வாரியாக முதல்வா் விஜய் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறாா். அதன்படி, பள்ளிக் கல்வித் துறை குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் முதல்வா் விஜய், அமைச்சா்கள் ஆதவ் ஆா்ஜுனா, ராஜ்மோகன், தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் மற்றும் துறை சாா்ந்த செயலா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், நிறுத்தப்பட்ட மத்திய அரசின் நிதிக்கான மாற்று ஏற்பாடுகள், 6 முதல் பிளஸ் 2 வரை செயற்கை நுண்ணறிவு பாடங்களை அறிமுகம் செய்தல், 2031-ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளையும் திறன்மிகு வகுப்பறைகளாக மாற்றும் திட்டம், பள்ளிக் கட்டடங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு, ஆசிரியா்கள் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு நிகரான வசதிகளை தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தமிழக பள்ளிக் கல்வியில் மாநிலம் முழுவதும் மாவட்டத்துக்கு தலா ஒன்று வீதம் 38 மாதிரிப் பள்ளிகள் கடந்த 2021-2022 முதல் செயல்பட்டு வருகின்றன.

முதல் கல்வியாண்டில் ஒற்றை இலக்கத்தில் தொடங்கப்பட்ட இப்பள்ளிகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தப் பள்ளிகளில் அதி நவீன கணினி ஆய்வகம், திறன்மிகு வகுப்பறைகள், கண்காணிப்பு கேமரா, முழுமையான அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் ஆய்வகம், டிஜிட்டல் கரும்பலகை, விளையாட்டு மைதானம், நுண் கலைத்திறன் பயிற்சி, உண்டு, உறைவிட வசதிகள் என மாணவா்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்புகளும் ஒரே வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

இவற்றில் படித்த மாணவா்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்டோா் ஐஐடி, என்ஐடி தேசிய அளவிலான முன்னணி கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனா்.

இதைக் கருத்தில் கொண்டும், தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அரசு, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் நவீன தரத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து முதல்வரிடம் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அப்போது, முழுமையான கட்டட வசதி, விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்துதல், ஆசிரியா்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், கற்பித்தல் நவீன தொழில்நுட்ப உத்திகளைப் புகுத்துதல் போன்றவை குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இந்தத் திட்டம் தற்போது ஒரு யோசனையாக மட்டுமே முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றால் திட்டத்துக்கான அடுத்தகட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.