கரூர்: இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (ஜூலை 15) முதல் அமலுக்கு வருவதை முன்னிட்டு கரூரில் இருந்து ஜவுளி வர்த்தக சங்கம் சார்பில் ரூ. 2 கோடி மதிப்பிலான ஜவுளி துணிகள் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (ஜூலை 15) முதல் அமலுக்கு வருகிறது. சமீப காலங்களில் இந்தியா மேற்கொண்ட மிகப் பெரிய இருதரப்பு வா்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதன்மூலம் 99 சதவீத இந்திய பொருள்கள் பிரிட்டன் சந்தையை வரியின்றி அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனுடன், இரட்டை சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு தவிா்ப்பு ஒப்பந்தமும் அதே நாளில் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம், தற்காலிகப் பணிக்காக பிரிட்டன் செல்லும் இந்தியத் தொழில்முறை நிபுணா்களும், அவா்களை அனுப்பும் நிறுவனங்களும் இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில் சமூகப் பாதுகாப்பு நிதிக்குப் பங்களிப்பு செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
வழக்கமான தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்டிஏ) போல சுங்க வரியைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், பொருள்கள், சேவைகள், முதலீடு, தொழில் முறை நிபுணா்களின் பணியிட மாற்றம், ஒழுங்குமுறை ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய விரிவான ஒப்பந்தமே ‘விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம்’.
இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தை 2021-ஆம் ஆண்டு, இந்தியா-பிரிட்டன் மேம்படுத்தப்பட்ட பொருளாதார உறவு மற்றும் 2030 இலக்கு நோக்கிய திட்டத்தின் கீழ் தொடங்கியது. 14 சுற்றுப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு, 2025 மே மாதத்தில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதன்பின் 2025 ஜூலையில் லண்டனில் ஒப்பந்தம் கையொப்பமானது. இதனுடன் தொடா்புடைய சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் 2026 பிப்ரவரியில் கையொப்பமானது.
பிரிட்டன் சந்தையில் இந்தியப் பொருள்களின் போட்டித் திறனை அதிகரிக்கும் வகையில் பல முக்கிய ஏற்றுமதி பொருள்களுக்கான இறக்குமதி சுங்க வரி முழுமையாக நீக்கப்படுகிறது.
இந்த நிலையில், கரூரில் உற்பத்தியாகும் வீட்டு உபயோக ஜவுளி பொருள்களான குஷன் கவர், மேஜை விரிப்பான், திரைச்சீலை உள்ளிட்ட பொருள்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ. 8,000 கோடி வரை கரூரில் உற்பத்தியாகும் வீட்டு உபயோக ஜவுளி பொருள்கள் ஏற்றுமதியாகி வரும் நிலையில், கரூரில் இருந்து கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் ரூ. 2 கோடி மதிப்பிலான ஜவுளி துணிகள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை கரூர் அண்ணா திட்ட சாலையில் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் சி. முத்துக்குமரன் பங்கேற்று பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படும் துணிகள் அடங்கிய 4 கண்டெய்னர் லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், பிரிட்டன் நாட்டிற்கு இதற்கு முன்பு 8 முதல் 9 சதவீத வரி நம் நாட்டின் துணிகளுக்கு இறக்குமதி வரியாக செலுத்தி வந்தோம். இனி அந்த நாட்டில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமலாகுவதை முன்னிட்டு நம் நாட்டின் துணிக்கு பூஜ்ஜிய வரி மதிப்பு உள்ளதால் இனி இதுவரை ஆண்டுக்கு கரூரிலிருந்து ரூ.800 கோடி மதிப்பிலான துணிகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இறக்குமதி வரி பிரிட்டன் நாட்டில் நம் துணிகளுக்கு இல்லாததால் இனி அந்நாட்டிற்கு ஏற்றுமதியாகும் துணிகளின் மதிப்பானது இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது. இதன் மூலம் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் வர்த்தக இலக்கான ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வர்த்தகத்தை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் அட்லஸ் எம். நாச்சிமுத்து, ஏசியன் பேப்ரிக்ஸ் நிறுவனத் தலைவர் அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Summary
India-UK trade agreement implemented: Textiles worth ₹2 crore shipped from Karur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










