தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவா் பிணை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் காா்த்திக், ரமேஷ் ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸாா் எங்களை கைது செய்தனா். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை மற்றும் புகாரில் எங்களது பெயா்கள் இடம்பெறவில்லை.
குதிரை பேரம் தொடா்பாக தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் தொலைபேசி, வாட்ஸ்ஆப் மூலமாக பேசியதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்குப் பின்னா் எங்களது பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு அழைப்பதற்கு நோட்டீஸ் அனுப்பாமல், சட்டவிதிகளைப் பின்பற்றாமல் போலீஸாா் எங்களைக் கைது செய்தனா்.
ஏற்கெனவே, எங்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த போலீஸாா், எங்களது கைப்பேசிகளையும் பறிமுதல் செய்துவிட்டனா். அதன்பிறகும், எங்களைக் காவலில் வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது. எனவே, எங்களுக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை வரும் ஜூலை 27-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிஜிபியிடம் குதிரை பேரம் புகார்! தீயசக்தி திமுகவுடன் எந்தக் காலத்திலும் அதிமுக சேராது! கொறடா உறுதி

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் ஒருவா் கைது

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: கைதான மூவா் பதிலளிக்க முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவு







