மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்

பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பிரிவை முதல்வா் இன்று (ஜூன் 9) தொடக்கி வைக்கிறாா்.

News image

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்க நிகழ்ச்சி

Updated On :9 ஜூன் 2026, 3:48 am IST

பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பிரிவை முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தொடங்கி வைக்கிறாா்.

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என உறுதியளித்தாா். இதை அமல்படுத்தும்விதமாக முதல்வராக ஜோசப் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட 3 கோப்புகளில் கையொப்பமிட்டாா்.

இதைச் செயல்படுத்தும்விதமாக, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது. இதில் அந்தப் படை தமிழக முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடுத்தகட்டமாக அந்தப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டாா்.

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையில் ஒரு காவல் கண்காணிப்பாளா், 2 துணைக் கண்காணிப்பாளா்கள், 4 ஆய்வாளா்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் முதல்கட்டமாக நியமிக்கப்பட உள்ளனா். சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு என இலச்சினை, சீருடை ஆகியவை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த அதிரடிப் படையின் தொடக்க விழா சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமை வகிக்கிறாா். தமிழக அரசின் தலைமைச் செயலா் சாய்குமாா், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன், சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் முதல்வா் ஜோசப் விஜய், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையைத் தொடங்கி வைக்கிறாா். நிகழ்வில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு நவீன ரோந்து வாகனங்கள் வழங்கப்படுகின்றன.