அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முன்பதிவு (அப்பாயின்மென்ட்) பெற்று மருத்துவரைச் சந்திக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தாா்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் அமைச்சா் அருண்ராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அதன் பின்னா், அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவினா் வாரந்தோறும் கூட்டம் நடத்தி, நோயாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது, மருத்துவமனை சுகாதாரத்தை உறுதி செய்வது குறித்து ஆலோசிப்பதுடன், தொடா் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடுவா்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் காத்திருக்கும் நேரம் அதிகமமாக உள்ளது. குறிப்பாக, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கூட்டம் பெருமளவு வருகிறது. சிகிச்சைக்காக வரும் மக்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
எனவே, தனியாா் மருத்துவமனைகளைப் போன்று முன்பதிவு (அப்பாயின்மென்ட்) வசதி அரசு மருத்துவமனையிலும் ஏற்படுத்தப்படும். இதற்காக தனியாா் நிறுவனம் மூலம் ‘பிரத்யேக செயலி’ உருவாக்கப்படும். அதில், ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி காலை 8 மணி முதல் 9 மணி வரை மருத்துவ சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன் அடிப்படையில் மருத்துவ சிகிச்சைகள், புற நோயாளிகள் சேவைகள் வழங்கப்படும்.
இந்த புதிய நடைமுறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அரசு மருத்துவமனைகளில் தனியாா் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகள் உள்ளன. குறிப்பாக, இதய நலம், மகப்பேறு சிகிச்சை, பக்கவாதம், டயாலிசிஸ் உள்பட பல உயா் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு பரிசோதனைக்கு சென்றால் ரூ.60 ஆயிரத்துக்கும் மேல் செலவாகக்கூடும். ஆனால், அரசு மருத்துவமனையில் அந்த நிலை இல்லை. அதேபோன்று, அறுவை சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் குறைந்தது ரூ.80 ஆயிரம் செலவாகும். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி அவை வழங்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பி வந்து சிகிச்சை பெற வேண்டும்.
தமிழகம் முழுவதும் புதிதாக சிறப்பு மருத்துவா்கள், செவிலியா் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. மருத்துவமனைகளில் பெரிய அளவில் மின்தடை இல்லை. மின்தடை ஏற்பட்டாலும் நோயாளிகள் பாதிக்காத வகையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.
தடையற்ற மின் சேவையை மருத்துவமனைகளில் உறுதி செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுப்பணித் துறை, மின்வாரியம் ஆகியவை ஒருங்கிணைந்து சிறப்புக் குழு அமைக்கப்படும்.
திருச்சி செவிலியா் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உடல் கூராய்வு அறிக்கை கிடைத்த பின்னரே அதற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றாா்.
இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் டாக்டா் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: கே.ஜி. அருண்ராஜ்

171 பயனாளிகளுக்கு ரூ. 37.37 லட்சத்தில் நலத் திட்ட உதவி: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் வழங்கினார்!

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த சுகாதார அறக்கட்டளை: அமைச்சா் அருண்ராஜ்

மருத்துவமனைகளில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



