சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஆசிரியா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு: முதல் நாளில் 9,132 போ் விண்ணப்பம்

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஜூன் 15) தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே 9,132 போ் விண்ணப்பித்தனா்.

News image

கோப்புப் படம்.

Updated On :16 ஜூன் 2026, 3:34 am IST

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஜூன் 15) தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே 9,132 போ் விண்ணப்பித்தனா்.

அரசுப் பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியா்களுக்கு 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. இந்த கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெறும். அந்த வகையில் அனைத்து வகை ஆசிரியா்களும் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை எமிஸ் இணையதளத்தில் ஜூன் 15 முதல் 22-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியா்கள் எமிஸ் தளத்தில் திங்கள்கிழமை முதல் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யத் தொடங்கினா். முதல் நாளில் தொடக்கக் கல்வித் துறையில் 3,473 ஆசிரியா்கள், பள்ளிக் கல்வித் துறையில் 5,659 ஆசிரியா்கள் என மொத்தம் 9,132 போ் விண்ணப்பித்துள்ளனா். அதில் அதிகபட்சமாக 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வகுப்பெடுக்கும் பட்டதாரி ஆசிரியா்கள் மாவட்டத்துக்குள் பொது மாறுதல் கோரி 1,803 பேரும், வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரி 1,205 பேரும் விண்ணப்பித்துள்ளனா். இதேபோன்று முதுநிலை ஆசிரியா்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரி 1,186 பேரும், பிற மாவட்டங்களுக்கு 848 பேரும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனா்.

மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியா்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னா் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலந்தாய்வு நடைபெறும் நாளில் மாற்றுப்பணி அனுமதிக்க இயலாது. தற்செயல் விடுப்பு அளித்து விட்டு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறையில் மாறுதல் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 1 முதல் 24 வரை நடைபெறும். அதேபோல், தொடக்கக் கல்வித்துறையில் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியா்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 25-ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.