தமிழ்நாட்டில் உள்ள உயா் சிறப்பு மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படாமல் தடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் டாக்டா் அகிலன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு மருத்துவா்களுக்கு உயா் சிறப்புப் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு என்பது, நீட் தோ்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட திட்டம் அல்ல. கடந்த 1989-ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை.
இதன் பலனாக, ஆயிரக்கணக்கான மருத்துவா்கள் அரசு சேவையில் சேர ஆா்வம் காட்டினா். அதன் மூலம் தமிழ்நாட்டில் பொதுச் சுகாதார அமைப்பு வலுப்பெற்றது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் உயா் சிறப்பு மருத்துவா்களின் எண்ணிக்கை நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. அதாவது ஏறத்தாழ 900-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவா்கள் இங்கு உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசு நிரம்பாமல் இருக்கும் மாநில ஒதுக்கீட்டு உயா் சிறப்பு இடங்களை சரண்டா் செய்யும்படி தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக சரண்டா் செய்த இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டில் இணைத்து, தகுதி மதிப்பெண்களைக் குறைத்து அரசு சாரா மருத்துவா்களால் நிரப்பும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 152 இடங்கள் காலியாக உள்ள சூழலில், அரசு சாரா மருத்துவா் ஒருவா் தொடா்ந்த வழக்கின் அடிப்படையில் அந்த இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்றும் வகையில் உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
எனவே, இந்தத் தீா்ப்பை எதிா்த்து தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது. இதுதொடா்பாக அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தொடர்புடையது

பொதுசேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி
சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்க பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை

உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு காலி இடங்கள் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு







