தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு அது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
வெள்ளை அறிக்கை வெளியிட்டு அவர் பேசியதாவது:
வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
வரவை விட செலவை கட்டுப்படுத்துவதே முக்கியம் என திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வரவைக் காட்டிலும் செலவே அதிகமாக உள்ளது. 2021 - 2026 வரையிலான காலகட்டத்தில் மாநில சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தமிழக அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது. ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 28.3% கடன் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கடன் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
3 ரூபாயில் ஒரு ரூபாய் வட்டிச் செலவு
சொந்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வட்டிக்காக மட்டுமே செலவாகிறது. வட்டிச் செலவு மட்டும் ரூ. 67,050 கோடியாக உள்ளது. மூலதன செலவு மட்டும் ரூ. 50,911 கோடியாக உள்ளது.
மொத்த வருவாய் வரவுகளில் வட்டிச் செலவிலத்தின் சதவீதம் 22.8% ஆக உள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாய் சதவீதம் 5.45% சரிந்துள்ளது.
தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை, இணை மாநிலங்களை விட அதிகமான கடன் சுமையுடன் பிறக்கிறது.
கனிம வளங்கள் இருந்தும் வருவாயில் பெரிதாக மாற்றம் இல்லை. 2021 - 2026-ல் 10% ஆக இருந்த கனிமவள வருவாய் 8.23% ஆக குறைந்துள்ளது.
5 ஆண்டில் ரூ. 4.87 லட்சம் கோடி புதிய கடன்
இணை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழக சரக்கு, சேவை வரி வளர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது. வணிக வரிகள் துறையில் நிலவும் அமைப்பு சார் ஊழல் காரணமாக கணிசமான இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சந்தை நிலவரத்தை பின்பற்றும் வகையில் வழிகாட்டு மதிப்புகள் திருத்தப்படவில்லை.
கடந்த 5 ஆண்டில் ரூ. 4.87 லட்சம் கோடி புதிய கடன் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் கடன் சுமை இரு மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ. 78,324 கோடியாக உள்ளது. மாநில மொத்த வருவாய் வரவுகளில் வட்டிச் செலவினத்தின் சதவீதம் 22.8% ஆக உள்ளது.
நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவு
முதியோர் சமூகமாக தமிழ்நாடு மாறி வருகிறது. இது மற்றொரு சவாலாக உள்ளது. நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ளது.
2021ஆம் ஆண்டில் 66.4% ஆக இருந்த உழைக்கும் வயதுடையோர் (15 - 59) மக்கள் தொகை 2036-ல் 63.3% ஆக குறையும். மக்கள் தொகை பரிமாணத்தின்படி பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும் முன்னரே முதுமையடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
நலத் திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது. அதற்கு இணையாக வருவாய் பெருக்கம் இல்லை. 2026 - 2027 இடைக்கால பட்ஜெட்டில் மாநில சொந்த வரி வருவாய் ரூ. 2,29,579 கோடியாக உள்ளது. தற்போதைய சூழலில் ரூ. 215600 கோடியாக உள்ளது.
உயர்கல்வித் தொகை, சமூக பாதுகாப்பு திட்டங்களும் வருவாய் பெருக்க நடவடிக்கையின்றி கொண்டு வந்தனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்டவை வருவாய் பெருக்க நடவடிக்கையின்றி மேற்கொள்ளப்பட்டவை. இத்தகைய சிறப்புத் திட்டங்களால் அரசுக்கு ரூ. 25,000 கோடி செலவாகிறது.
Summary
The TVK government released a white paper minister Mariya wilson
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











