எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

கூடங்குளம் மின்சாரத்தைக் குறைந்த விலையில் வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு மின்வாரியம் கோரிக்கை

கூடங்குளம் 3, 4-ஆவது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை குறைந்த விலையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்

News image

மின்வாரியம்

Updated On :10 மார்ச் 2026, 7:33 am IST

சென்னை: கூடங்குளம் 3, 4-ஆவது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை குறைந்த விலையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என மத்திய மின் துறைக்கு தமிழ்நாடு மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து தமிழகத்துக்கு தினமும் 1,152 மெகாவாட்டும், மற்ற மின்சாரம் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ரூ.5.40-க்கு தமிழக மின்வாரியம் கொள்முதல் செய்கிறது.

இதனிடையே கூடங்குளம் அணு மின்நிலயத்தில் தலா 1,000 மெகாவாட் திறனில் 3 மற்றும் 4-ஆவது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்துக்கு யூனிட் ரூ.5.91-க்கு விற்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் சிலா் கூறியதாவது:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரம் யூனிட் ரூ.4-க்கு மின்வாரியத்துக்கு கிடைக்கிறது. இதனால், கூடங்குளம் மின் நிலையத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய இயலாது.

குஜராத்தின் காக்ராபா் அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அந்த மாநிலத்துக்கு யூனிட் ரூ.5.60-க்கு வழங்க மத்திய அரசு தயாராக இருந்தது. ஆனால், விலையைக் குறைத்து வழங்க மாநில அரசு கோரிக்கை விடுத்ததன்பேரில், யூனிட் ரூ.4.50-க்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.

அதேபோல, கூடங்குளம் 3 மற்றும் 4-ஆவது அணு உலை மின்சாரத்தை குறைந்த விலையில் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தி மத்திய மின் துறையின் தென் மாநில மின்சார குழுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து விலையைக் குறைக்க வேண்டும் என்றனா்.